வட கொரியாவில் 2 மாதங்கள் தாமதமாக பள்ளிகள் துவங்கியது
By: Monisha Thu, 04 June 2020 12:32:54 PM
சீனாவின் மத்திய நகரமான உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகில் உள்ள 210 நாடுகளுக்கு மேல் பரவி கதிகலங்க வைத்து வருகிறது. உலகமெங்கும் 62¾ லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் பாதித்து இருக்கிறது. 3¾ லட்சத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்திருக்கிறது.
இந்தநிலையில் வட கொரியாவில், வழக்கமாக ஏப்ரல் 1 ஆம் தேதி துவக்கப்படும் கல்வியாண்டு, கொரோனா அச்சத்தால் 2 மாதங்கள் தாமதமாக துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முகக்கவசம் அணிந்து அங்குள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது.
நீலம் மற்றும் வெள்ளை நிறம் ஆடைகளை அணிந்து மாணவ-மாணவிகள் இன்று காலை தங்கள் பள்ளிகளுக்கு வந்தனர். அனைவரும் ஆடையில் சிவப்பு நிற பூக்கள் மற்றும் முகக்கவசம் அணிந்திருந்தனர். நீங்கள் உங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என ஆசிரியர் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.
கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரிய அரசு, அந்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறித்து ரகசியம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.