இலங்கையில் பருவ விடுமுறைக்காக ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் மூடப்படாது
By: vaithegi Sat, 30 July 2022 12:09:34 PM
இலங்கை : இலங்கை நீண்ட காலமாகவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மேலும் உணவு, பானம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட மக்கள் கைக்கு எட்டாமல், அதன் விலைகள் விண்ணை தொடும் நிலையில் உள்ளது. தொடர்ந்து பணவீக்கம் தினம் தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இதையடுத்து இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் பெருமளவு உயர்ந்து காணப்பட்டது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.இதையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் வரை கொழும்பு அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாமல் வகுப்புகள் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதாவது பருவ விடுமுறைக்காக ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் மூடப்படாது என்றார்.
இதை அடுத்து மேலும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய பிரச்சினைகள் காரணமாக இந்த வருடத்தின் பெரும்பாலான பகுதிகளில் பல நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தமையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பெரும்பகுதியில் பள்ளி வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.