பள்ளிகளை ஜனவரி மாதம் திறக்கலாம்... 75 சதவீத பெற்றோர் கருத்து
By: Monisha Tue, 10 Nov 2020 3:21:27 PM
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோர்களின் கருத்துக்களை அறிய கல்வித்துறை முடிவு செய்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று கருத்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.
பெரும்பாலான பெற்றோர் தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்ற கருத்துக்களையே பதிவு செய்திருந்தனர். தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தாக்கம் முழுமையாக குறையவில்லை. இந்த சூழ்நிலையில் பள்ளிகளை திறந்தால், மாணவர்கள் தங்களின் நண்பர்களுடன் சகஜமாக பழகுவர். இதனால் அவர்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பது என்பது இயலாத காரியம். எனவே கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.
ஆனால் சில அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர், பள்ளிகளை திட்டமிட்டபடி திறக்க வேண்டும் என்றனர். வகுப்பறையில் நேரடியாக கற்றுக் கொடுதால் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்தி பாடங்களை கற்க முடியும். பொதுத் தேர்வுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளது. இந்த சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமானால், உயர்கல்வி கற்பதில் பல சிக்கல்கள் ஏற்படும். எனவே பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திட்டமிட்டபடி பள்ளிகளை திறக்க வேண்டும் என்றனர்.
இந்த கருத்து கேட்பு கூட்டம் சென்னை, திருவள்ளூர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
கொரோனா தொற்று குறைவாக காணப்படும் தெற்கு மண்டலத்தில் 70 சதவீத பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இருப்பதாக தெரிவித்தனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாணவர்களின் பெற்றோர்களில் 75 சதவீதம் பேர் பள்ளிகளை ஜனவரி மாதம் திறக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
திருவள்ளூர் மண்டலத்தைச் சேர்ந்த பெற்றோர்களில் 80சதவீதம் பேர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.
திருச்சியிலும் பெரும்பாலான பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பெற்றோர் இரண்டு வித கருத்துகளையும் கூறியுள்ளனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பெற்றோர்கள் பொதுத்தேர்வு இருப்பதால் மாணவர்கள் பள்ளிகளில் சென்று கல்வி கற்பது நல்லது. அதே நேரத்தில் மாணவர்கள் பள்ளி பஸ்களில் மட்டுமே சென்று வர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
சேலம், நாமக்கல் மாவட்ட பெற்றோர்களும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்தனர்.
பெற்றோர்களில் பெரும் பாலானோர் கொரோனா 2-வது அலை பரவும் அச்சத்தை சுட்டிக்காட்டி பள்ளி, கல்லூரிகள் திறப்பதை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இதை அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.