ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணியை கொட்டிய தேள்
By: Nagaraj Sat, 06 May 2023 5:44:14 PM
நாக்பூர்: விமானத்தில் பெண் பயணியை கொட்டிய தேள்... நாக்பூரில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பெண் மீது தேள் கொட்டிய சம்பவம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்துள்ளது. ஆனால் தற்போதுதான் வெளியில் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேள் கொட்டிய பெண் பயணி ஒருவர் விமான நிலையத்தில் பரிசோதனை செய்தபோது மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டார். பின்னர் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
“ஏர் இந்தியா விமானம் AI 630 இல் சென்ற ஒரு பெண் பயணியை கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தேள் கொட்டியது. இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது” என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் தேள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மற்ற பூச்சிகள் உள்ளே நுழையாமல் இருக்க விமானம் புகை போடப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் உணவுத் துறையையும் தங்கள் பகுதியை முழுமையாக ஆய்வு செய்ய வலியுறுத்தியது. தேள், உணவு மூலம் விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்பதால், தேவைப்பட்டால், அந்த பகுதியை புகை போடவும் பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பறக்கும் விமானங்களில் பல்லி மற்றும் ஊர்வன புகுந்த சம்பவங்கள் நடந்துள்ளன.