விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால் தூதரகத்திற்கு பாதுகாப்பு
By: Nagaraj Mon, 07 Dec 2020 09:42:11 AM
தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு... இந்திய தூதரகம் முன் விவசாயிகளுக்கான ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டதையடுத்து தூதரகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள், விவசாய சங்கத்தினர் டில்லிக்குள் நுழையும் போராட்டத்தை கடந்த நவ., 26ம் தேதி முதல் நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் விவசாய பிரதிநிதிகளுடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
விவசாய சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நடைபெறும் எனவும் வரும் 8 ம் தேதி பாரத் பந்த் நடைபெறும் எனவும் விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் 9ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் அரசுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டது. இதனையடுத்து லண்டன்
போலீசார் குவிக்கப்பட்டு தூதரதகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
மேலும் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த 36 எம்.பிக்கள் இந்திய
வம்சாவளி எம்.பிக்கள் உள்ளிட்டோர் இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர்
டோமினிக் ராப் வசம் விவசாயிகள் பிரச்னைகள் குறித்து கடிதம் எழுதினர்.
முன்னதாக
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு
தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன்
பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் இருநாடுகளின் உறவும்
பாதிக்கப்படும் என தெரிவித்திருந்தது.