குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By: Monisha Mon, 26 Oct 2020 11:58:07 AM
திருவண்ணாமலையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை தாலுகா தேனிமலை பகுதியில் உள்ள கோவிந்தராஜ் நகரில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்து இருப்பதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ,அவரது உத்தரவின் பேரில் மாவட்ட வினியோக அலுவலர் அரிதாஸ் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் அமுல் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது குடோனில் 50 கிலோ எடை கொண்ட 500 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த எடையளவு 25 டன் ஆகும். இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்து லாரிகள் மூலம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதன் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.