செந்தில் பாலாஜி.. அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை
By: vaithegi Tue, 20 June 2023 09:43:55 AM
சென்னை: அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நாளை விசாரணை .... சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ததில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்ய ஏதுவா செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொண்டு வருகிறார். அமலாக்க துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு வருகிற 21-ம் தேதி பைபாஸ் சர்ஜரி செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்வதற்காக, ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளது.
மேலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு முன் முறையிட்டார். விசாரணை முறையீட்டை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தது.