ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ள செந்தில்பாலாஜி: முறையீடு ஏற்பு
By: Nagaraj Sat, 09 Sept 2023 07:26:30 AM
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு, சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்னை அடுத்து இந்த வழக்கில், ஆகஸ்ட் 28ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, மேலும் அவரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க அவசியமில்லை எனவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ள அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இம்மனுவை விசாரிக்க, முதன்மை அமர்வு நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் மறுத்த நிலையில், இதுசம்பந்தமாக விளக்கம் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து ஜாமின் மனுத்தாக்கல் செய்து உள்ளார். ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் முறையிட்டு உள்ளனர். முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்து உள்ளார்.