லஞ்சம் வாங்கி சிக்கிய மாசு கட்டுப்பாட்டு அதிகாரியிடம் தீவிர விசாரணை
By: Nagaraj Fri, 11 Dec 2020 8:28:00 PM
'கட்டுக்கட்டாக லஞ்சப்பணம் பதுக்கி வைத்து கையும் களவுமாக சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருபவர் தன்ராஜ். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவாரூரை சேர்ந்த நிவேதா என்ற பெண், தனது அரிசி ஆலைக்கான சுற்றுச்சூழல் உரிமத்தை புதுப்பிப்பதற்காக தன்ராஜை அணுகியுள்ளார்.
அப்போது, அதனை செய்து கொடுக்க தன்ராஜ் ரூ.40 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கேட்டிருக்கிறார். இதனால் கடுப்பான நிவேதா, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ரசாயனம் தடவிய நோட்டுகளை நிவேதாவிடம் கொடுத்து அனுப்பிய அதிகாரிகள் தன்ராஜ் அந்த பணத்தை பெரும் போது கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து சென்னை ஊரப்பாக்கத்தில் இருக்கும் தன்ராஜின் வீடுகளிலும்,
நாகப்பட்டினத்தில் அவர் தங்கியிருந்த அறையையும் அதிகாரிகள் திடீரென சோதனை
செய்தனர். சோதனையின் முடிவில் மொத்தமாக ரூ.62 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்
பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், சில ஆவணங்களையும்
அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். லஞ்சம் வாங்கி கட்டுக்கட்டாக பணம்
சேர்த்து காவலரின் பிடியில் சிக்கியிருக்கும் தன்ராஜிடம் அதிகாரிகள்
விசாரணை நடத்தி வருகின்றனர்.