சர்வர் பழுது... முற்றிலும் முடங்கிய இ-சேவை மையங்கள்
By: Monisha Thu, 17 Dec 2020 08:40:19 AM
அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சான்றிதழ் பெறவும், பட்டா மாறுதல் மற்றும் புதிய பட்டா பெறுதல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கவும் சேவை மையங்களை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் சமீபகாலமாக இ-சேவை மையங்களில் செயல்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விருதுநகரில் இ-சேவை மையங்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் சர்வர் பழுது காரணமாக முடங்கியுள்ளன. தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கூட்டுறவுத் துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் மட்டுமல்லாது தனியார் நடத்தும் சேவை மையங்களும் முற்றிலுமாக முடங்கி விட்டன.
மாவட்டத்தில் முடங்கியுள்ள சேவை மையங்களை செயல்பாட்டில் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை தொடர்வதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்த வருவாய்த்துறை சான்றுகள் பெற முடியாமலும், சமூக நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமலும், வங்கி கடன் பெற தேவையான பட்டா அடங்கல் ஆகியவற்றை பெற முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.