- வீடு›
- செய்திகள்›
- கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு 74 சதவீதம் பேர் ஆதரவு
கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு 74 சதவீதம் பேர் ஆதரவு
By: Karunakaran Tue, 11 Aug 2020 1:14:25 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்தவுடனே கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸை தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்பது குறித்து நாடு முழுவதும் ‘கோவன் கனெக்ஷன் இன்சைட்ஸ்’ என்ற அமைப்பின் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு 23 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர், லடாக், அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள 179 மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் நடத்தப்பட்டது.
கடந்த மே மாதம் 30-ந் தேதி முதல் ஜூலை 16-ந் தேதி வரை 25 ஆயிரத்து 371 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் திருப்தி அளிப்பதாக 37 சதவீதம் பேரும், ஓரளவு திருப்தி அளிப்பதாக, அதாவது பரவாயில்லை 37 சதவீதம் பேரும் கூறி உள்ளனர். அந்த வகையில் 74 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தங்கள் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்பி அளிப்பதாக 78 சதவீதம் பேரும், வெளிமாநில தொழிலாளர்களை மாநில அரசுகள் நடத்திய விதம் நன்றாக இருந்ததாக 76 சதவீதம் பேரும், மோசமாக இருந்ததாக 20 சதவீதம் பேரும், ரேஷன் கார்டு மூலம் இலவச அரிசி அல்லது கோதுமை பெற்றதாக 71 சதவீதம் பேரும், ஊரடங்கால் தங்கள் மாத வருமானம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக 71 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.