நேபாள் பிரதமர் ஷர்மா ஒலிக்கு திடீர் நெஞ்சு வலி; மருத்துவமனையில் சிகிச்சை
By: Nagaraj Wed, 01 July 2020 9:33:10 PM
நேபாள் பிரதமருக்கு திடீர் நெஞ்சுவலி... நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒலி-க்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்கு முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
நேபாளம், சமீபகாலமாக இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. சீனாவுடன் நெருக்கம் காட்டும், நேபாள அரசு, இந்தியாவின் காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளுக்கு உரிமம் கொண்டாடி வரைபட மாற்ற சட்ட மசோதாவையும் பார்லி.,யில் நிறைவேற்றியது.
செயற்கையாக தனது நிலப்பரப்பை விஸ்தரிக்க நேபாளம் முயற்சிப்பதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்க, அன்னிய நாடுகள் சதித்திட்டம் தீட்டுகிறது என நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியாவை மறைமுகமாக குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனிடையே, ஆளும் கட்சியான நேபாள கம்யூ., கட்சியின் நிலைக் குழு கூட்டம்
பலுவடாரில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நேற்று (ஜூன் 30)
நடைபெற்றது. அதில், பிரதமர் கே.பி ஷர்மா ஒலியின் கருத்து அரசியல் ரீதியாக
சரியானது அல்ல, ராஜதந்திர ரீதியானது அல்ல. இதுபோன்ற பிரதமரின் அறிக்கை,
அண்டை நாடுகளுடான உறவில் சேதத்தை ஏற்படுத்துமென முன்னாள் பிரதமரான புஷ்பா
கமல் தஹால் பிரசண்டா தெரிவித்துள்ளார்.
ஆளும் கம்யூனிஸ்ட்
கட்சிக்கும், நேபாள அரசுக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லையெனவும்,
தன்னிச்சையாக செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். பிரசாண்டாவை தவிர, மற்ற
மூத்த தலைவர்களான மாதவ் குமார் நேபாள், ஜலநாத் கானால், பாம்தேவ் கவுதம்
மற்றும் நாராயங்காஜி ஸ்ரேஸ்தா ஆகியோரும், ஷர்மா ஒலி இந்தியாவுக்கு எதிராக
கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் அல்லது அவரது பதவியில் இருந்து
ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
கே.பி., ஷர்மா ஒலி
பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டுமென ஆளும் கட்சியை சேர்ந்த 57
உறுப்பினர்களே நெருக்கடி அளித்து வரும் நிலையில், நேபாளத்தில் விரைவில்
ஆட்சி மாற்றம் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் பிரதமர்
கே.பி.,ஷர்மா ஒலி-க்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிசோதனைக்கு பின்
காத்மாண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக பிரதமரின்
ஆலோசகர் தெரிவித்துள்ளார்.