பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குஜராத் மாநில சுகாதாரத்துறை மந்திரியின் மகன்
By: Karunakaran Mon, 13 July 2020 12:07:02 PM
குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள குமார் கனானி என்பவது மகன் பிரகாஷ் கனானி. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் சூரத் நகரில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்துள்ளனர்.
ஊரடங்கள் மீறி சுற்றிய அவர்களை பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தி உள்ளார். இதனையறிந்த பிரகாஷ் கனானி சம்பவ இடத்திற்குச் சென்று தனது நண்பர்களுக்கு ஆதரவாக அந்த பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுனிதா, கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? யாரா இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன் என கடுமையாக கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பிரகாஷ் கனானி பதிலுக்கு காவலரை எச்சரித்துள்ளார். இதற்கு காவலர் உரிய பதிலை அளித்துள்ளார். இதுகுறித்து வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட பலர் அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், சுனிதாவிற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியும், அவரது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் பெண் காவலர் சுனிதா காவல் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார். இருப்பினும் அவர் தற்போது விடுப்பில் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.