அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று கருப்பினத்தவர் மீது துப்பாக்கிச்சூடு
By: Karunakaran Tue, 25 Aug 2020 09:39:35 AM
அமெரிக்காவில் கடந்த மே மாதம் மினசோட்டா மாகாணத்தில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்துக்கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.
அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது, அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று தற்போது மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மினசோட்டாவின் அண்டை மாகாணமான விஸ்கான்சினில் ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை போலீசார் பலமுறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஜேக்கப் பிளேக், வேனுக்குள் ஏற முயற்சிக்கும்போது, அவரை ஆயுதங்கள் ஏந்தி பின்தொடர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு, பின்னாலிருந்து சுட முயற்சிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 முறை சுடப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். ஜேக்கப் பிளேக் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், அப்பகுதியில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.