சூடானில் விவசாயப்பணி மேற்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல்
By: Karunakaran Sat, 25 July 2020 8:29:43 PM
வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடான சூடான் நாட்டில் 2013 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நிலவி வந்தது. இந்த போர் காரணமாக பலர் தங்கள் சொந்த இடங்களை விட்டு வேறுபகுதிகளுக்கு தஞ்சம் அடைந்தனர். தற்போது போர் சற்று குறைந்து விட்டதால், இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பி வருகின்றனர்.
ஆனால் ஏற்கனவே கைவிடப்பட்ட பகுதிகளை வேறு சிலர் கைப்பற்றி விவசாயம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிலத்தின் சொந்த உரிமையாளர்களுக்கும், போரால் கைவிடப்பட்ட நிலத்தை கைப்பற்றியவருக்கும் இடையே உரிமைச்சண்டை அடிக்கடி நடக்கின்றன.
தற்போது அந்நாட்டின் டர்பூர் நகரில் உள்ள விவசாயநிலப்பகுதியில் போரின் போது கைப்பற்றிய இடத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் அங்கு விவசாயம் வந்தனர்.
இந்நிலையில், விவசாய நிலத்திற்குள் நேற்று துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கு விவாசய பணிகளை செய்துகொண்டிருந்தவர்களை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இதனால் அங்கு விவாசய பணிகளை செய்துகொண்டிருந்த 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.