- வீடு›
- செய்திகள்›
- வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு - செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து வெளியேறிய அதிபர் டிரம்ப்
வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு - செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து வெளியேறிய அதிபர் டிரம்ப்
By: Karunakaran Tue, 11 Aug 2020 11:00:37 AM
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. இது அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இதனால் எப்போதும் வெள்ளை மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். மேலும் அங்கு 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர்.
இந்நிலையில் வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். இதனை சுதாரித்த ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டினால் அந்த மர்ம நபர் காயமடைந்தார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். ஆனால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பின் பாதியில் இருந்து வெளியேறினார். சிறிது நேரத்திற்கு பின், அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஒரு நபரை தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆயுதங்களுடன் வந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவித்தார்.