தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
By: Monisha Thu, 11 June 2020 2:54:52 PM
தமிழகத்தில் நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மன்னார் வளைகுடா, வட தமிழக கடற்கரை பகுதிகள், ஆந்திர கடற்கரைப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அடுத்த இரு தினங்களுக்கு இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.