நாமக்கல்லில் நோய்வாய்ப்பட்ட கோழிகள் இறைச்சிக்காக விற்பனை... அதிகாரிகள் திடீர் சோதனை
By: Nagaraj Sun, 11 June 2023 4:15:19 PM
நாமக்கல்: அதிகாரிகள் திடீர் சோதனை... நாமக்கலில் நோய்வாய்ப்பட்ட கோழிகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் 1,000 -த்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளது. இதில், 6 கோடி முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கோழிகள் மூலம் தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பெரும்பாலும் கோழிப் பண்ணைகளில், முட்டையிடாத வயது முதிர்ந்த கோழிகள் இறைச்சிகளுக்கும், நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கும் கோழிகள், பண்ணைகளில் குழிதோண்டி புதைத்து விடுவது வழக்கம்.
ஆனால், நாமக்கல்லில் உள்ள ஒரு சில கோழி இறைச்சி கடையின் உரிமையாளர்கள் பண்ணைகளில் நோய்வாய்ப்பட்ட கோழிகளை குறைந்த விலைக்கு வாங்கி லாபம் பார்க்கும் நோக்கில் மக்களின் உடல் நலனை கருத்தில் கொள்ளாமல் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் - மோகனூர் சாலையில் கொண்டிச் செட்டிப்பட்டியில் பெயர் பலகை இல்லாத ஒரு இறைச்சி கடைக்கு மினி சரக்கு வாகனத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள கோழிகளை கொண்டு வந்து இறக்கி வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறையினர் பூட்டிருந்த இறைச்சிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடைமுன் இறக்கி வைக்கப்பட்ட அனைத்து கோழிகளும் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதோடு சில கோழிகள் இறந்திருந்ததும் தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, 'தினந்தோறும் பகல் நேரத்தில் கோழிகளை இறக்கிவிட்டு சென்று விடுவார்கள். பின்பு இரவு நேரத்தில் அந்த கோழிகளை சுத்தம் செய்து பின்னர் வெளியில் கொண்டு செல்வர்' என தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, தூய்மை பணியாளர்களை அழைத்து வந்து கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு இருந்த நோய்வாய்ப்பட்ட கோழிகளை வாகனத்தில் எடுத்து சென்று வேறு இடத்தில் புதைத்தனர்.