கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை வெளியிட்ட சித்தராமையா
By: Karunakaran Fri, 24 July 2020 12:03:41 PM
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக அரசை குற்றம் சாட்டியிருந்தார்.
சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு ஆவணங்களை வெளியிட்டதுடன், ஒரு ரூபாய் கூட முறைகேடு நடக்கவில்லை. சித்தராமையா கூறிய குற்றச்சாட்டு பொய் என கூறினார். ஆனால் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆதாரங்கள் இருப்பதாகவும், அதனை வெளியிடுவதாகவும் சித்தராமையா கூறினார்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கர்நாடகத்தில் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். மேலும் அவர், கர்நாடகத்தில் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரூ.4,167 கோடியை கொரோனா உபகரணங்கள் வாங்குவதற்காக அரசு செலவு செய்துள்ளதாக கூறினார்.
கொரோனா உபகரணங்கள் வாங்க செலவு செய்த ரூ.4.167 கோடியில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் முறைகேடு நடந்திருக்கிறது. வாங்கப்பட்ட 5 லட்சம் கொரோனா உபகரணங்களில் 1 லட்சம் உபகரணங்கள் தரமானது அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் மட்டும் 2 மடங்கு, 3 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.