90 சதவீதம் மயக்க நிலையிலிருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி.பி.; மகன் வீடியோ பதிவு
By: Nagaraj Tue, 25 Aug 2020 8:07:09 PM
எனது தந்தை 90 சதவீதம் மயக்க நிலையிலிருந்து மீண்டுவிட்டார் என்று எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ம் தேதி முதல் எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தினமும் தனது தந்தையின் உடல்நிலை குறித்து எஸ்.பி.சரண் தகவல் வீடியோ மூலம் தெரிவித்து வருகிறார்.
அவர் இன்று(ஆகஸ்ட் 25) வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில்
கூறியிருப்பதாவது: "மருத்துவர்களிடம் இன்று பேசினேன். தந்தையின் உடல்நிலை
சீராக உள்ளது. நேற்று கூறியதைப் போல அவர் பதிலளிக்கிறார். மயக்க
நிலையிலிருந்து 90 சதவீதம் மீண்டுவிட்டார். மருத்துவருக்கு ஒத்துழைப்பு
அளிக்கிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு
அளிக்கிறார். என்னுடைய தந்தைக்காக செய்யப்படும் பிரார்த்தனை,
வேண்டுதல்களுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டவர்கள்.
தந்தையின்
உடல்நிலை குறித்து தமிழில் வீடியோ பதிவிடுவதற்கு பலர் கோரிக்கை
வைக்கின்றனர். தந்தைக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதனால், தமிழில் என்னால் தந்தையின் உடல்நலம் குறித்து விளக்கமளிக்க
முடியவில்லை." இவ்வாறு எஸ்.பி.சரண் அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.