ஆந்திரா கடற்கரை கிராமத்தில் மக்களுக்கு கிடைத்த சிறிய அளவிலான தங்க உருண்டைகள்
By: Nagaraj Mon, 30 Nov 2020 09:53:47 AM
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த உப்படா கடற்கரை கிராமத்தில் சிறிய சிறிய உருண்டைகளாக தங்கம் கிடந்துள்ளது. இதை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தமிழகம், புதுச்சேரியை தொடர்ந்து ஆந்திராவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது . அம்மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால், பலரது வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
எனினும் கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல நிவர் புயல் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் வழங்கி உள்ளது. ஆம். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் சிறிய கடலோர கிராமம் உப்படா. இங்கு கடல் அரிப்பு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் கடற்கரை பகுதியில் தங்கம் போன்று ஏதோ
மின்னுவதை பார்த்த அதனை ஊர்மக்கள் அனைவரிடமும் தெரிவித்துள்ளனர். உடனடியாக
அனைவரும் கடற்கரைக்கு சென்று பார்த்த போது, அங்கு சிறிய சிறிய உருண்டைகளாக
தங்கம் கிடந்துள்ளது.
50க்கும் மேற்பட்ட மக்கள் தலா ரூ.3,500
மதிப்பிலான தங்கத்தை எடுத்துள்ளனர். இதுபற்றி உள்ளூர் காவல்துறையினர் கூறிய
போது " உப்படா கிராமத்தில் இருக்கும் கோயில்கள், ஏராளமான வீடுகள் கடல்
நீரால் அரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் வீடுகள் மற்றும் கோயில்கள்
கட்டும் போதும் சிறிய அளவிலான தங்கத்தை அடித்தளத்தில் போட்டு பணிகளைத்
தொடங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதுதான் கடல் அரிப்பால் தற்போது வெளியே வந்திருக்கலாம்" என்று தெரிவித்தனர்.