தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட பாம்புகள், குரங்குகள்
By: Nagaraj Sun, 14 Aug 2022 4:25:50 PM
சென்னை: தாய்லாந்து நாட்டு தலைநகர் பேங்காகிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில்தான் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்த முகமது ஷகீல் (21) என்ற பயணி மீது, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் வைத்திருந்த பெரிய கூடையை சந்தேகத்தில் திறந்து பார்த்து சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் தனித்தனி சிறிய பாக்கெட்டுகளில் மத்திய ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, செசல்ஸ் தீவு போன்றவைகளில் வசிக்கும் பாம்புகள், குரங்கு, ஆமை போன்றவர்கள் கடத்தி வரப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சோதனை செய்தனர். வட அமெரிக்கா நாட்டில் உள்ள கிங் ஸ்நேக் என்ற விஷமற்ற பதினைந்து பாம்புகளும் இருந்துள்ளன.
மேலும் ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய பகுதிகளில் உள்ள காடுகளில்
வசிக்கும் பால் பைத்தான் எனற ஒரு வகை மலைப்பாம்பு குட்டிகள் 5, ஆப்பிரிக்க
நாட்டில் சேஷல்ஸ் தீவில் அதிகம் காணப்படும் அல்ட்ரா பிராட் டாடாஸ் என்ற
ஒருவகை ஆமை வகைகள் 2, மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் வசிக்கும் டி பிராசா
மங்கி என்ற குரங்கு குட்டி 1, மொத்தம் 23 விலங்குகள் இருந்தன. இதை அடுத்து
கடத்தல்காரரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது
இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று
விட்டு, அங்கு தங்கி இருந்துவிட்டு, இவைகளை அங்கிருந்து வாங்கி வந்துள்ளார்
என்று தெரியவந்தது. இவைகளை எதற்காக வாங்கி வந்தார்? என்று எதுவும்
தெரியவில்லை. இந்த விலங்குகள் எதற்குமே மருத்துவ பரிசோதனை மற்றும்
சான்றுகள் இல்லை.
எனவே இவைகளை திருப்பி அனுப்ப
அதிகாரிகள் முடிவு செய்தனர். அதோடு திருப்பி அனுப்புவதற்கான செலவுகளையும்
அந்த கடத்தல்காரரிடமே வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.