- வீடு›
- செய்திகள்›
- இலங்கை மக்களுக்கு உதவ இந்திய அரசையும் சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொண்ட சோனியா காந்தி..
இலங்கை மக்களுக்கு உதவ இந்திய அரசையும் சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொண்ட சோனியா காந்தி..
By: Monisha Sun, 10 July 2022 7:58:35 PM
இலங்கை: நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அதில், இலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்குமாறு சர்வதேச சமூகத்திற்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது மாளிகையிலிருந்து தப்பிச் சென்றார்.
இந்நிலையில், இலங்கையில் நிலவி வரும் நெருக்கடியான அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை விடுத்துள்ளார். சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி கவலையுடன் கவனித்து வருகிறது.இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியான சூழலில் அந்நாட்டு மக்களுடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வரும் இலங்கை அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்.அதேபோன்று சர்வதேச சமூகமும் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்க வேண்டும்" என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.