- வீடு›
- செய்திகள்›
- பிரிட்டன் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் தெற்காசிய மக்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்
பிரிட்டன் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் தெற்காசிய மக்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்
By: Karunakaran Sat, 20 June 2020 12:47:11 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா பாதிப்பினால் சேர்க்கப்படும் தெற்காசிய மக்கள் மருத்துவமனைகளில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 நாடுகள் தெற்காசிய நாடுகளாகும்.
எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது சுகாதார அமைப்புகள் என 27 நிறுவனங்கள் மற்றும் 260 மருத்துவமனைகள் பங்கு பெற்றன. இந்த ஆய்வில், கொரோனாவுக்கு சிகிச்சை பெரும் 1,000 வெள்ளையின மக்களில் 290 பேர் இறக்கின்றனர் என தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு 1,000 தெற்காசிய மக்களில் 350 பேர் இறக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
பிரிட்டன் மருத்துவமனையில் உள்ள தெற்காசிய இனத்தவரின் மரண வீதமும் தொற்று விகிதமும் வெள்ளை இனத்தவரோடு ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஈவன் ஹாரிசன் கூறுகையில், தெற்காசிய இனத்தவர்களில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் சுமார் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதால், ஆசிய இனத்தவர்களின் கொரோனா தொற்றும், இறப்பு வீதமும் அதிகரிக்கிறதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தெற்காசிய மக்கள் அதாவது சிறுபான்மையின மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் கொரோனா வைரசிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக முகக்கவசம் அணிதல் மிகமிக அவசியம் என்று கூறியுள்ளார்.