தென்கொரியாவை சீண்டும் வடகொரியா; போர் மூளும் அபாயம்
By: Nagaraj Thu, 18 June 2020 12:45:16 PM
சீண்டுகிறது வடகொரியா... தென் கொரியா எல்லைக்குள் ராணுவத்தினரை அனுப்பி, மீண்டும் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக, வட கொரியா அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம், வட கொரியாவின் குண்டு வீச்சில், தென் கொரிய எல்லையில், கசாம் நகரில் இருந்த, தகவல் உதவி மைய கட்டடம் தகர்க்கப்பட்டது. அத்துடன், நிலம், நீர் வழி எல்லைகளில், வட கொரியா, ராணுவத்தை அனுப்பி வைத்தது. இதனால், இரு நாடுகள் இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது.
இதை மேலும் அதிகரிக்கும் வகையில், எல்லை தாண்டி கசாம் நகருக்குள், ராணுவத்தை அனுப்ப உள்ளதாக, வட கொரியா அறிவித்துள்ளது. மேலும், வட - தென் கொரிய மக்கள் சந்திக்கும், டைமன்ட் மலைவாச விடுதியிலும், ராணுவத்தினர் நிறுத்தப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக, வட கொரியாவின் மிரட்டலை சமாளிக்க, ராணுவம் தயாராக
உள்ளதாக, தென் கொரியா அறிவித்து உள்ளது. கடந்த, 2018ல், வட-தென் கொரிய
நாடுகள் இடையே சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இரு தரப்பும், எல்லையில்
துப்பாக்கிச் சூட்டை நிறுத்தி, கண்ணி வெடிகளை அகற்றவும், எல்லை
கண்காணிப்பு சாவடிகளை அழிக்கவும் ஒப்புக் கொண்டன.
இந்நிலையில், இந்த
ஒப்பந்தத்திற்கு உதவிய அமெரிக்கா, இன்னும் பொருளாதார தடைகளை அகற்றாததால்,
வட கொரியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதன் காரணமாக ஒப்பந்தத்தை மீறி,
மீண்டும் தென் கொரியாவை சீண்டி வருகிறது.