மகாராஷ்டிராவில் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம்
By: Karunakaran Fri, 19 June 2020 11:03:09 AM
சமீபத்தில் நிசர்கா புயல் காரணமாக, மகாராஷ்டிராவில் உள்ள கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன. இந்நிலையில் கடந்த வாரம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்து வந்தநிலையில் நேற்று மும்பையில் பலத்த மழை பெய்தது. நகரின் பல பகுதியில் பலத்த மழை பெய்தது.
மஹாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. பல இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். கோலாப்பூர் மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பலத்த மழை காரணமாக குர்லா மெக்தாப் சொசைட்டியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
கனமழை காரணமாக குர்லா மெக்தாப் சொசைட்டியில் இருந்த குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே ஜோகேஸ்வரி, மேக்வாடி பகுதியில் ஒரு சால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சாகிரா சேக், தவுசீப் சேக், பாத்திமா குரேஷி ஆகிய 3 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், மாநகராட்சியினர் அவர்களை மீட்டு மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
தானே சிராக் நகர் பகுதியில் ரெய்மண்ட் நிறுவனத்தின் 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த வார இறுதி வரை மும்பையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.