10ம் வகுப்பு மாணவர்கள் ஹால்டிக்கெட் பெற நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
By: Nagaraj Sun, 07 June 2020 5:03:31 PM
சிறப்பு பேருந்துகள் இயக்கம்... 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் தேர்வுக்கூட அனுமதி சீட்டு பெறுவதற்காக சென்னையில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாநகர போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 63 வழித்தடங்களில் 109 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றியும், ஆசிரியர்கள் பயணச்சீட்டு பெற்றும் பயணிக்கலாம். அவர்களை தவிர பிற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இந்த சிறப்பு பேருந்துகளை அடையாளம் காண ஏதுவாக பள்ளிக்கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு பேருந்துக்கும் 24 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஏற்கனவே பொதுத்தேர்வின் போது மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்காக, சென்னையில் 99 வழித்தடங்களில், 104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வுக்கூட அனுமதி சீட்டுபெறுவதற்கும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.