நாளை பள்ளி திறப்பையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
By: vaithegi Sun, 11 June 2023 4:27:09 PM
சென்னை: தமிழகத்தில் நீண்ட நாள் கோடை விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் வெளியூர் சென்றிருக்கும் பயணிகளுக்காக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டு உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவிப்பு ...
தமிழகத்தில் 1 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணத்தினால் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை 1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
அதாவது, தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து சென்னைக்கு 650 சிறப்பு பேருந்துகளும், கோயம்புத்தூர், மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து 850 சிறப்பு பேருந்துகளும் என்று மொத்தமாக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதையடுத்து முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் ஏதுவாக மதுரை மற்றும் திருச்சியில் இருந்து தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இச்சிறப்பு பேருந்துகள் பொது மக்களின் பயணத்திற்கு ஏதுவாக இருக்கிறதா என்பதையும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.