நிரவ் மோடியின் சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கதுறைக்கு சிறப்பு கோர்ட்டு அனுமதி
By: Karunakaran Tue, 09 June 2020 10:59:23 AM
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பி சென்றார். பின்னர் கடந்த ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, மும்பை சிறப்பு கோர்ட்டு நிரவ் மோடியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நிரவ் மோடியின் சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை மும்பை சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தது.
இந்த மனு விசாரணை நடைபெற்ற போது, நீதிபதி வி.சி. பார்டே பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடகு வைக்கப்படாத, ஈடாக வைக்கப்படாத நிரவ் மோடிக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கினார். நிரவ் மோடிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
மேலும், தப்பியோடிய பொருளாதார குற்றவாளி சட்டத்தின் கீழ் நிரவ் மோடியின் சொத்துக்களை ஒரு மாதத்துக்குள் பறிமுதல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.