கோல்கத்தாவிலிருந்து சென்னைக்கு ஒருவருக்காக மட்டும் இயக்கப்பட்ட சிறப்பு விமானம்
By: Nagaraj Sun, 28 June 2020 09:20:54 AM
சிங்கப்பூரில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்டு வந்த சிறப்பு விமானத்தில் கோல்கத்தாவிலிருந்து ஒரே ஒருவர் மட்டும் சென்னைக்கு வந்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து, கோல்கட்டா வழியாக, சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில், ஒரே ஒரு பயணி மட்டுமே வந்தார். மத்திய அரசு, வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர, சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
அதன்படி, சிங்கப்பூரில் இருந்து, மேற்கு வங்கம் மாநிலம், கோல்கட்டா வழியாக, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, சிறப்பு விமானம் சென்னை வந்துள்ளது. அந்த விமானம் வந்து நின்றதும், பயணியர் இறங்கிச் செல்ல, 'ஏரோபிரிட்ஜ்' எனப்படும் தானியங்கி நடைமேடை, விமானத்துடன் இணைக்கப்பட்டு, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன.
விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணியரை வரவேற்க
தயாராகினர். ஆனால், அந்த விமானத்தில் இருந்து, சென்னையைச் சேர்ந்த, 40 வயது
மதிக்கத்தக்க, ஒரு பயணி மட்டுமே வெளியே வந்தார். இதனால், விமான நிலைய
அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அந்த நபரிடம் விசாரித்த போது,
'சிங்கப்பூரில் இருந்து, 145 பேர், இந்த விமானத்தில் பயணித்தோம்.
கோல்கட்டாவில்,
144 பேர் இறங்கி விட்டனர். நான் மட்டும் தனியாக, சென்னைக்கு வந்தேன்'
என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு நபர்
மட்டும் இருந்த நிலையிலும் கோல்கத்தாவிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானம்
இயக்கப்பட்டு அவரை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்ததை அறிந்த மக்கள்
அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.