சிறப்பு ரெயில் மூலம் 620 பேர் ஜார்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைப்பு
By: Monisha Wed, 03 June 2020 2:11:13 PM
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சிறப்பு ரெயில் மூலம் அந்தந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவு பணிபுரிந்து வந்தனர்.
அவர்களை திண்டுக்கல்லில் இருந்து முதலாவது சிறப்பு ரெயில் மூலம் 1600 பேர் பீகார் மாநிலத்துக்கும், 2-வது சிறப்பு ரெயில் மூலம் 696 பேரும், 3-வது சிறப்பு ரெயில் மூலம் 1600 பேர் பீகார் மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 4-வது சிறப்பு ரெயில் மூலம் 1600 பேர் உத்திரபிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று 620 பேர் ஜார்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். திண்டுக்கல் முகாமில் தங்கி உள்ள 82 பேர், புதுக்கோட்டையை சேர்ந்த 48 பேர், அரியலூரை சேர்ந்த 31, நாமக்கல்லை சேர்ந்த 226, தஞ்சாவூரை சேர்ந்த 20, சேலத்தில் 36, திருச்சியில் 164, திருவாரூரில் 131 என மொத்தம் 620 பயணிகள் திண்டுக்கல்லில் இருந்து கிளம்பும் சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இன்று மதியம் 3 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து கிளம்பும் ரெயில் வருகிற 5-ந் தேதி காலை 9 மணிக்கு ஜார்கண்ட் மாநிலத்தை சென்றடையும்.
ரெயில் புறப்படும் முன் அவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.