அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆன்மீக தலைவர் மொராரி பாபு 5 கோடி நன்கொடை
By: Karunakaran Tue, 28 July 2020 12:21:08 PM
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்ததையடுத்து, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக 15 உறுப்பினர்களைக்கொண்ட, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது.
ராமர் கோவில் கட்ட நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர். அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆன்மீக தலைவர் மொராரி பாபு 5 கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மொராரி பாபு கூறுகையில், வியாஸ்பீடம் சார்பில் 5 கோடி ரூபாய் நன்கொடையை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளைக்கு வழங்க உள்ளதாக கூறினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவில் நேரடியாக பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.