ஆன்மிகம் என்பது விஞ்ஞானம்தான் உடல் நலம்தான் மனநலம் - தமிழிசை சவுந்தரராஜன்
By: Monisha Sun, 12 June 2022 6:53:15 PM
சென்னை : சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் சார்பில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழாக் குழு நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹரிவராசனம் நூற்றாண்டு விழாவை கவர்னர் தமிழிசை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்ததார்.
பின்னர் நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசுகையில், ஹரிவராசனம் பாடலில் 366 எழுத்துக்கள் உள்ளதால் தினமும் ஓர் எழுத்து நம்மை காக்கிறது. அதேபோல் ஹரிவராசனம் பாடலில் 108 வார்த்தைகளும் உள்ளன. இந்த 108 என்ற எண் இந்து மதம், புத்த மதம், யோகக்கலை ஆகியவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது 108 எண்ணாகும். அதனால் தான் உயிரை காக்கும் ஆம்புலன்சுக்கு கூட 108 என்று பெயர் வந்தது என்று கூறினார்.
மேலும் கவர்னர் தமிழிசை பேசுகையில், சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலின் 18 படிகளை தாண்டினால் உடல் நலம், மனநலம் ஆகியவை மேம்படும். இதில் முதல் 5 படிகள் நம் ஐம்புலன்களையும் அடக்குவது பற்றியும், அடுத்த 8 படிகள் கோபம், இச்சை, பேராசை, மோகம், பொறாமை, தற்பெருமை, போட்டி, கர்வம் ஆகிய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதையும், அடுத்த 3 படிகள் நற்குணம்,வேட்கை, செயலற்ற தன்மை போன்ற மனிதர்களின் மாறுபட்ட தன்மை பற்றியும் கூறுகிறது.
மற்ற 2 படிகள் ஞானத்தையும், அஞ்ஞானத்தையும் நமக்கு சொல்லி கொடுக்கிறது. 18 படிகளையும் தாண்டிவிட்டால் வாழ்க்கையில் படிப்படியாக எதையும் தாண்டி விடலாம் என்ற வாழ்வியலை ஐயப்ப சுவாமி வழிபாடு நமக்கு சொல்லி கொடுக்கிறது. ஆக, ஆன்மிகம் என்பது விஞ்ஞானம்தான் உடல் நலம்தான் மனநலம் என்று பேசினார்.