சிங்கள ராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா கூறியது பற்றி இலங்கை போலீஸ் விசாரணை
By: Karunakaran Tue, 23 June 2020 1:04:58 PM
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் துணைத்தலைவராக இருந்த கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரன், மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2004-ம் ஆண்டு, கிழக்கு மாகாண போராளிகளுடன் இயக்கத்தில் இருந்து விலகினார். அதன்பின், தனி அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். விடுதலைப்புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடைந்த பின் கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜபக்சே கட்சியில் இணைந்து எம்.பி. ஆகி, பின் துணை மந்திரியாக பதவி ஏற்றார்.
தற்போது, இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் அகில இலங்கை திராவிட மகாசபா என்ற கட்சி சார்பில் கிழக்கு மாகாணத்தில் உள்ள டிகாமடுல்லாவில் கருணா போட்டியிடவுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றபோது அதில் கருணா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தபோது, ஆனையிறவில் நடந்த சண்டையில், ஒரே இரவில், 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம்வரையிலான சிங்கள ராணுவத்தினரை கொன்றேன். கிளிநொச்சியில்தான் அதிக படையினரை கொலை செய்தேன். இலங்கையில் கொரோனாவால் ஏற்பட்ட உயிர்ப்பலியை விட இது அதிகம்தான் என்று கூறினார். இது பெரும் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உண்மைத்தன்மை பற்றி அறிய குற்ற புலனாய்வு துறை விசாரணைக்கு இலங்கையின் தற்காலிக போலீஸ் துறை தலைவர் சாந்தனா விக்ரமரத்னே உத்தரவிட்டுள்ளார். இந்த தேர்தலில், ராஜபக்சே கட்சியுடன் கருணா கட்சி கூட்டணி அமைத்திருப்பதாக கருதப்பட்டது. ஆனால் தற்போது, கருணாவின் பேச்சால், ராஜபக்சே கட்சி, தங்கள் கூட்டணியில் கருணா கட்சி இல்லை என்று அதிகாரபூர்வமாக மறுத்துள்ளது.