இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகினார்
By: vaithegi Sat, 09 July 2022 10:57:54 PM
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெரும் அவதிப்பட்டு வரும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு பொறுப்பில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தது.
இதனையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். பொருளாதார நெருக்கடி தீராததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் பெரும் போராட்டம், பிரமாண்ட பேரணி நடந்தது.
மேலும் கொழும்புக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் ஒன்று வெளியாகியது.
சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட்த்திலும் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்கள் நலன் கருதி ராஜினாமா செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.