இலங்கையின் நிதி நெருக்கடி: உலக வங்கி தெரிவித்த தகவல்
By: Nagaraj Fri, 07 Apr 2023 10:26:14 AM
கொழும்பு: இலங்கை தற்போதைய நிதி நெருக்கடியை ஒரு வலுவான மற்றும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்த முடியும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடி பணப் புழக்கத்தால் ஏற்பட்டுள்ள தற்காலிக பிரச்சினை அல்ல என்றும் அதனை வெளிப்புற நிதியுதவியின் மூலம் தீர்க்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு அதனை நிவர்த்தி செய்ய ஆழமான மற்றும் நிரந்தரமான சீர்திருத்தங்களை செயற்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை இந்த கடினமான நெருக்கடி வழங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பிரச்சினையை அனுபவிக்கும் பிற நாடுகளும் நெருக்கடிக்கான மூலக் காரணங்களைத் தீர்க்காவிட்டால், அத்தகைய நெருக்கடிகள் மீண்டும் நிகழும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது.
இதேவேளை ஏழைகளையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பாதுகாப்பதற்கு உயர் வருமானம் கொண்டவர்கள் அதிக சுமைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.