இலங்கை பாராளுமன்ற தேர்தல் இன்று காலை தொடங்கியது; விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
By: Nagaraj Wed, 05 Aug 2020 10:03:33 AM
இலங்கையில் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும்12,985 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கிணங்க 225 உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்வதற்காக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
22 தேர்தல் மாவட்டங்களில் நடைபெறும் வாக்களிப்பில் 196 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படுவார்கள். மிகுதி 29 பேர் தேசியப்பட்டியல் மூலம் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவர். இதன்படி அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் 7,452 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாட்டின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலுமிருந்து அரசியல் கட்சிகளின் சார்பில் 3,652 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3,800 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய
மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் அதிகளவான
மாவட்டங்களில் போட்டியிடுகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி, யாழ்.
மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இம்முறை போட்டியிடுகின்றமை
குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கான வாக்களிப்பு
நாட்டில் நிலவும்
கொரோனா வைரஸ் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு சுகாதாரத் துறையினரின்
ஆலோசனைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது
தொடர்பில் தேர்தல் ஆணையாளர் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரையான காலத்தில்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருபவர்களுக்கு வாக்களிக்க
சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில்
அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இம்முறை அதிக வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர்.
கொழும்பில் அரசியல் கட்சிகளின் சார்பில் 352 பேரும் சுயேச்சைக்
குழுக்களிலிருந்து 572 பேரும் போட்டியிடுகின்றனர்.பொலன்னறுவை
மாவட்டத்திலேயே குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
152 பேர்
அங்கு போட்டியிடுகின்றனர்.வாக்குச் சாவடிகளில் வைரஸ் பரவலுக்கு எவ்வித
வாய்ப்பும் இல்லை. வாக்குச் சாவடிகளுக்குள் தொற்றுடன் வரவோ அல்லது வைரஸ்
தொற்றுடன் வெளியேறவோ எவ்வித வாய்ப்புகளும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர்
தெரிவித்துள்ளார்.
வாக்குச் சாவடிகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம்
முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும். கைகளையும் கழுவிக்கொண்டு வரவேண்டும்.
வாக்குச் சாவடியில் முதலாவதாகவுள்ள அதிகாரிக்கு முகக்கசவங்களை பணித்து
வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முகத்தை காட்ட வேண்டும்.
பின்னர்
மீண்டும் கைகளை கழுவ வேண்டும். அதன் பின்னர் கை விரலை மடித்து மை
பூசிக்கொள்ள வேண்டும். ஒருமுறை மாத்திரமே மை பூசும் பேனை
பயன்படுத்தப்படுத்தப்படும் என்பதால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வைரஸ்
பரவலுக்கு வாய்ப்பு இல்லை. அதனால் வாக்காளர்களை அச்சமின்றி வாக்குச்
சாவடிகளுக்கு வருமாறு கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இம்முறை
வாக்குகளை எண்ணும் செயற்பாடுகள் நாளை 6ஆம் திகதி வியாழக்கிழமை காலையில்
ஆரம்பமாவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 66 மத்திய
நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நடைபெறும். இம்முறை தேர்தல்
கடமைகளில் மூன்று இலட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ்
அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக இம்முறை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில்
வெளிநாட்டவர் எவரும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.