எஸ்.எஸ்.எல்.சி. அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது!
By: Monisha Fri, 23 Oct 2020 09:08:40 AM
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட இருக்கிறது. மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
கொரோனா காரணமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்டு இருக்கிறது.
அதில், ஒரு மணிநேரத்துக்கு 20 மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக திட்டமிட வேண்டும். வரிசையில் நிற்கும்போது மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தவேண்டும். பள்ளிக்கு வருகைதரும் பெற்றோர், மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்கவேண்டும்.
சான்றிதழ்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்களும் முக கவசம் மற்றும் கையுறைகள் அணிந்திருப்பது அவசியம் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.