சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி... குறித்து பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
By: vaithegi Fri, 29 July 2022 5:56:28 PM
சென்னை: இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. இப்போட்டியானது தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியின் தொடக்க விழா நேற்று (ஜூலை 28) சென்னை மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதில் ஏகப்பட்ட வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். மேலும் நாட்டின் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் பிரதமருக்கு நன்றி சொல்லி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
மேலும் இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் பிரதமர் காட்டிவரும் ஆர்வத்தை பற்றி தனது கடித்ததில் முதல்வர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுவதற்குரிய ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேண்டுகோளையேற்று, 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதை முதல்வர் சுட்டிக்காட்டினார். இவ்விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை அடுத்து இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு 23-5-2022 அன்று கடிதம் எழுதியுள்ளதாகவும், செப்டம்பர் 2022 இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.