339 கிலோ சாக்லெட்டில் உருவாக்கிய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலை
By: Monisha Thu, 24 Dec 2020 08:48:29 AM
புதுவையில் உள்ள சாக்லெட் கடையில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலையை உருவாக்கியுள்ளனர். இந்த சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
புதுவை மிஷன் வீதியில் உள்ள சாக்லெட் கடையில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சாக்லெட் சிலைகள் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு 'விங் கமாண்டர்' அபினந்தன் சிலையை உருவாக்கி வைத்திருந்தனர்.
இந்த ஆண்டு மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலையை உருவாக்கியுள்ளனர். இதற்காக 339 கிலோ சாக்லெட்டை கொண்டு 161 மணிநேரம் செலவழித்து சுமார் 6 அடி உயரம் உள்ள இந்த சிலையை உருவாக்கி உள்ளனர்.
இந்த சிலையை கடைக்கு வருபவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். பலர் அதன் அருகே நின்று செல்பியும் எடுத்துக்கொள்கின்றனர்.