பயணிகள் அதிகரிப்பால் இன்று முதல் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை!
By: Monisha Wed, 03 June 2020 4:34:33 PM
குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லைக்கு செல்வதற்கு பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதேபோல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம் செல்லும் பஸ்களிலும் கூடுதல் பயணிகள் பயணம் செய்தனர். இதனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் இன்று முதல் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை நெல்லைக்கு 12 பஸ்கள் இயக்கப்பட்டது. பஸ்களில் சமூக இடைவெளியில் பயணிகள் பயணம் செய்தனர். டிரைவர், கண்டக்டர்கள் முக கவசம், கையுறை அணிந்திருந்தனர். திருச்செந்தூர், தென்காசி, தூத்துக்குடிக்கு பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை. கன்னியாகுமரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. கிராமப்புறங்களுக்கும் நேற்றை விட இன்று கூடுதல் பஸ்கள் ஓடியது. இதனால் அண்ணா பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
குமரி மாவட்டத்தில் உள்ள 12 டெப்போக்களில் இருந்தும் இன்று காலை 225 பஸ்கள் இயக்கப்பட்டது. போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் நிலையங் களில் கூட்ட நெரிசலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டனர். குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. நாகர்கோவிலில் இருந்து சென்ற பஸ்கள் மார்த்தாண்டம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு நேற்று குறைவான பஸ்களே இயக்கப்பட்டது. இதனால் வருவாய் குறைவாக இருந்தது. நேற்று ரூ.6 லட்சம் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது.