மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பகுதியில் கற்சிலை கண்டெடுப்பு
By: Nagaraj Thu, 31 Aug 2023 6:48:12 PM
சென்னை:சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பகுதியில் ஒரு அடி உயர கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
பழங்கால கோவில்களில் திருடப்பட்ட பழமையான சாமி சிலைகளை மீட்கும் பணியில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து பழங்கால சாமி சிலைகள் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சிலைகளை அந்தந்த கோவில்களில் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள துலுக்கானந்தம்மன் கோவில் முன்பு மணல் பரப்பில் 2 பழமையான சாமி சிலைகள் கிடந்தன.
இந்த கருங்கல் சிலைகள் குறித்து பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சிலைகளை மீட்டு அப்பகுதி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். இதேபோல் மெரினா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கலங்கரை விளக்கம் பின்புறம் கடற்கரையில் ஒரு அடி உயர கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட சிலையை மெரினா போலீசார் மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். கோயில்களில் உள்ள பழங்கால சிலைகளை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் திருடிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.