மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
By: Monisha Fri, 05 June 2020 3:54:47 PM
தமிழகத்தில் நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை முதல் பலத்த மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கிமீ வேகத்தில் வீசுவதால் இன்றும், நாளையும் தென் கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மத்திய மேற்கு வங்கக் கடலின் கிழக்கு பகுதியில் வரும் 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.