கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கையான 1-ம் எண் கூண்டு ஏற்றம்
By: Monisha Fri, 23 Oct 2020 2:35:58 PM
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, கடலூர் துறைமுகத்தில் தூர புயல் எச்சரிக்கையான 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்தது. அது தற்போது, வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் ஒடிசா மாநிலம் பாரதீப்பிற்கு 180 கி.மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
இது மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 23-ந்(அதாவது இன்று) தேதி மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுகள் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, கடலூர் துறைமுகத்தில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் தூர புயல் எச்சரிக்கையான 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.