இந்து கோயில்கள் மீது தாக்குதலுக்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை
By: Nagaraj Wed, 24 May 2023 8:16:31 PM
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி அதற்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பனீஸ் இந்திய பிரதமர் மோடியிடம் உறுதியளித்துள்ளார்.
3 நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிட்னி பாதுகாப்பு படையினரின் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீசும், பிரதமர் மோடியும் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஆஸ்திரேலியாவுக்கு இந்திய மாணவர்கள் கல்வி கற்க செல்வதையும், தொழிலதிபர்களின் வர்த்தக ரீதியிலான பயணத்தை ஊக்குவிக்கும் வகையிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பயணம் மேற்கொண்ட 2 மாதங்களில் தாம் ஆஸ்திரேலியா வந்திருப்பதாகவும், கடந்த ஓராண்டில் இருவரும் 6வது முறையாக சந்தித்து பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கிரிக்கெட் மொழியில் கூறுவதானால், இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உறவு -டி20 கிரிக்கெட் போல வேகம் அடைந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.