- வீடு›
- செய்திகள்›
- துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
By: Karunakaran Sat, 31 Oct 2020 12:04:06 PM
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் நேற்று 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மேலும் பயங்கர நிலநடுக்கத்தால் அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்து பலத்த சேதமடைந்தன.
மேலும் அங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. இதனால் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். முதல் கட்டமாக 4 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் துருக்கி அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது, துருக்கி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 419 பேர் காயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் நகரத்துக்குள் புகுந்ததாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். இது ஒரு மினி சுனாமி என்று அச்சத்துடன் தெரிவித்தனர். ஆறு போல நகரத்துக்குள் புகுந்த கடல் நீரால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதே நிலநடுக்கம் கிரீஸ் நாட்டிலும் ஏற்பட்டது. இருப்பினும் அந்நாட்டில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.