பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
By: Karunakaran Tue, 23 June 2020 10:29:37 AM
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது எல்லைமீறி தாக்குதல் நடத்தி வருவது வழக்கம். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கும். இருப்பினும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், பல்வேறு நாடுகள் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இருப்பினும் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்திய எல்லை பகுதியான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கை உரிமை கோரி சீனா அச்சுறுத்தி வரும் நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளன. இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள குனிமார் பகுதியில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கதுவா மாவட்டத்தில் உள்ள ரதுவா கிராமத்தின் அருகே கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களுடன் பறந்து வந்த ஆளில்லா விமானத்தை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். காஷ்மீர் எல்லையில் உள்ள கிராமங்கள் மற்றும் இந்திய ராணுவ நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தற்போது புலனாய்வு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகள் சிலர் நகருக்குள் ஊடுருவி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மார்க்கெட்டுகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற இடங்களில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.