உளவுத்துறை எச்சரிக்கையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு
By: Nagaraj Mon, 22 June 2020 5:37:32 PM
உளவுத்துறை எச்சரிக்கை... தீவிரவாதிகள் டெல்லிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தலாம்' என்று உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்சகட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது டெல்லி.
போலீசாரும், அதிரடிப்படை வீரர்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இத்துடன் நான்கு அல்லது ஐந்து தீவிரவாதிகள் நாசகார செயல்களில் ஈடுபடும் திட்டத்துடன் ஊடுருவியிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் உளவுத்துறை அதிகாரிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.
இதனால், டெல்லி மாவட்ட போலீசார் நேற்றிரவிலிருந்து வாகன தணிக்கை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். டெல்லி எல்லைகள் அதிரடிப்படை வீரர்கள் மூலம் அதிதீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
இந்த எச்சரிக்கை குறித்து காவல துறை அதிகாரிகள் கூறுகையில், "டெல்லியில்
உள்ள 15 காவல் மாவட்டங்களையும் பாதுகாப்பு வளையத்துக்குள்
கொண்டுவந்திருக்கிறோம். எல்லைப் பகுதியில் கண்காணிப்பைப்
பலப்படுத்தியிருக்கிறோம்.
உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை
அடிப்படையில் வடக்கு டெல்லியை அதி தீவிரமாகக் கண்காணித்துக்
கொண்டிருக்கிறோம். தலைநகருக்குள் நுழையும் ஒவ்வொருவரும்
விசாரிக்கப்படுகிறார்கள். சந்தை, மருத்துவமனை, தாங்கும் விடுதிகள்,
விருந்தினர் இல்லங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும்
கண்காணிப்பைத் தீவிரமாக்கியிருக்கிறோம்" என்றார்கள்.
சீனா,
பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி
வருகிறது. இதைச் சாதகமாகக்கொண்டு எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்த
தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, ஜம்மு -
காஷ்மீர் பதிவு எண் கொண்ட வாகனங்கள் அதிதீவிர தணிக்கைக்கு
உட்படுத்தப்படுகின்றன.