அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
By: Monisha Tue, 11 Aug 2020 2:51:31 PM
அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கோடை விடுமுறை கடந்தும், பள்ளிகளின் விடுமுறை நீண்டுகொண்டே செல்கிறது.
இதற்கிடையே மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது மற்றும் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்குவது என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆக.24ந்தேதி முதல் தொடங்கப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை.
கொரோனா சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சாத்திமே இல்லை. கொரோனா தாக்கம் குறைந்தபின்னரே பள்ளிகள் திறப்பு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.