நீட் தேர்வு அனுமதி சீட்டு வராததால் மாணவி தற்கொலை
By: Nagaraj Wed, 02 Sept 2020 09:20:46 AM
நீட் தேர்வுக்கான அனுமதி சீட்டு வராததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி-களபம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா, 12-ம் வகுப்பு முடிந்துள்ளார். மருத்துவம் படிக்க நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், அவருடன் படித்த சக மாணவிகளுக்கு மட்டும் அனுமதி சீட்டு வந்துள்ளது.
தனக்கு அனுமதி சீட்டு வராததால், மனமுடைந்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திங்களன்று நீட் தேர்வுக்கான அனுமதி சீட்டு வந்த நிலையில்
நேற்று ஹரிஷ்மா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே குடும்ப
பிரச்னை காரணமாக மாணவி விஷம் அருந்தியதாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்
அளித்துள்ளனர்.
ஆனால் ஹரிஷ்மாவுக்கு அனுமதி சீட்டு வராததால் அவரின்
தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் தான் மனமுடைந்த மாணவி தற்கொலை
செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.